Saturday, February 14, 2009

தீரும் காலம்.....

இருள் தன்னோடு எடுத்து வந்து
என்னுள் வைத்தது

அழுத்தம் தாங்காமல்
கனவுகள் கிழிந்து போய் அறை எங்கும்
சுவாசிக்கப்பட்ட காற்றாய்
நிரம்பிக் கிடக்கிறது...

நடு நிசி ஆந்தையின் அலறலாய்
சுமை தாங்கா முனகலும் கொஞ்சம் கேட்கும்

பெரு வெளியில்
என் இருப்பை
அதுவே
உறுதிப்படுத்துகிறது...

தன்னைத் தானே தின்னும்
சக்கரத்தின்
ஒரு ஓரத்தில் நானும்

தின்று முடியும் போது
இதுவும் தீரும்....

தேவதைகளின் இறகு

இருள் நிறைந்த கிணறொன்று
தேவதைகளால் நிறைந்து வழிவதாகவும்
நடந்து வந்த பாதையில்
கிடந்ததாய் சொல்லி
தேவதைகளின் இறகொன்றை
கொடுத்துச் சென்றாள்...

நிலவிழந்த இரவில்
தென்னை மரங்கள் அடர்ந்த
அக்கிராமத்து வீதியில் சில கிழவர்கள்
அதைப் போன்ற இறகை
தலைக்கு வைத்து
உறங்குவதைக் கண்டேன்...

Wednesday, February 11, 2009

பறவைகள் உலகம்

எல்லாப் பறவைகளுமே
கழுகின் கண்ணும்
கிளியின் மூக்கும்
மயிலின் தோகையும்
தேடி ஓடுகின்றன...

குயிலின் குரலை
வாங்கிய சேவலொன்று
படியேறி வந்து புலம்பியது
’நல்ல டிமாண்ட் சார், ரேட் தான் ஜாஸ்தி’


பறக்க ஆசை தான்...

பறப்பது பற்றி பேசும் போதெல்லாம்
றெக்கை குறித்து
விளக்க வேண்டியிருக்கிறது..

உயரம் கூறும் போது தான்
கவலை கொள்கின்றன

இந்த பறவைகள்
இட்ட முட்டைகள்
இங்கே தான் இருக்கின்றன...

ரைட்டும் லெப்ட்டும்
ஸ்ட்ரைட்டுமே திசைகளாய்
பதிக்கப்பட்ட குஞ்சுகள் உறையும்
அக்மார்க் முட்டைகள்...

றெக்கைக்கு உறையிட்டு வெளி வந்த குஞ்சொன்று
பைக் உதைத்துக் கடந்தது

நிறமற்ற நாயும் பின் சென்றது.....